செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மேகத்தை தழுவும் மலையும் வாகை சூடிய மண்ணும்...


நான் முன்பு ஒவ்வொரு பயணத்தின் பொழுதும் என்னுடைய பயணத்தை வலைப்பதிவிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சில காரணங்களுக்காக எழுதுவதை  நிறுத்தியிருந்தேன். எனது பைக்கிங் நண்பர்கள் எழுதுவதை பார்த்த உடன் என்னை இந்த வலைப்பதிவை எழுதும்படி செய்தது.

எனது முதல் நீண்ட தூர  பைக்கிங் (பின்னிருக்கை சவாரி) அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக இந்த வலைப்பதிவை எழுதுகிறேன்.

நான் முன்பு CTC (Chenai Trekking Club) உடன் மலையேற்றம் மற்றும் குறைவான தூர பைக்கிங் சிலவற்றில் பங்கேற்றிருக்கின்றேன். ஆனால் இது தான் எனது முதல் நீண்ட தூர  பைக்கிங் (பின்னிருக்கை சவாரி) அனுபவம். (1400km)





ஜனவரி மாதம் முதல் தேதியன்று குமார பர்வதம் மலையேற்றம் சென்றிருந்தேன். பிறகு ஜனவரி 2 ம் வாரத்தில் கன்னியாகுமாரி மற்றும் ராமேஸ்வரம் பெற்றோர்களுடன் சென்றிருந்தேன். அதனால் பண நெருக்கடி இருந்ததால் குடியரசு தினத்தன்று எனது நண்பர்கள் மலையேற்றத்திற்கு  அழைத்த போது மறுத்தேன். பிறகு வேறொருவர் தர வேண்டிய பணம் திடீரென்று வந்ததால் நான் மலையேற்றத்திற்கு தயாரான போது, அவர்கள் திடடம் ரத்தாகியிருந்தது. அப்பொதுழுது தான் CTC இடமிருந்து குடியரசு தின பைக்கிங் மேகமலை - வாகமனிற்கு செல்வதற்காக ஒரு குழு அழைப்பு மின்னஞ்சல் வந்தது. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பைக் பயணத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்தேன்.  (பின் குறிப்பு: முன்பு பதிவு செய்த பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன சில காரணங்களால் L ) பதிவு செய்து 2 நாட்கள் ஆன பிறகும் அழைப்பு மின்னஞ்சல் வராததால் அழைப்பிலிருந்த கதிர் அலைபேசி எண்ணை அழைத்தேன். அவருடன் அளவளாவிய பிறகு தான் தெரிந்தது, அவர் எனக்கு முன்பே அறிமுகமானவர் என்று. ஆனால் அவர் என்னை மறந்திருந்தார். அவர் சொன்னார், இன்று இரவு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு மின்னஞ்சல் வரும் என்று. செவ்வாய் அன்று இரவு 11.30 மணி அளவில் அழைப்பு மின்னஞ்சல் வந்தது மற்றும் அதில் என் பெயரும் இருந்தது. என்னை தேர்ந்தெடுத்தற்காக CTC அமைப்பாளர்களான தினேஷ் மற்றும் கதிர் ஆகியோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.


பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு Whatsapp குழு உருவாக்கப்பட்டது,  பைக் அடிப்படை உபகரணங்கள் மற்றும் சவாரி செய்யும் போது எடுத்துச் செல்ல வேண்டியவை, பயணம் பற்றிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அமைப்பாளர்கள் தெளிவாக விளக்கினார்கள். 25 ஜனவரி, வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் சந்திப்பதற்கும், அங்கிருந்து பயணத்தைத் துவங்கவும் திட்டமிடப்பட்டது. முழங்கால்களில் பாதுகாப்பு கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால் என்னையும் சேர்த்து  பெரும்பாலோர் கடைசி நிமிடத்தில் அதை வாங்க வேண்டியிருந்தது. சரத் எனக்காக அதை தருவதாக ஒப்புக்கொண்டதால் எனக்கு சற்று நிம்மதி வந்தது.

25.01.18 வியாழக்கிழமை மாலை (170 KM)

இளமுருகு தி.நகரிலிருந்து என்னை தாம்பரம் ரயில் நிலையம் அழைத்து செல்ல தயாராக இருந்தார். வியாழக்கிழமை மாலை மிகவும் உற்சாகத்துடன் நான் 5:55 மணி அளவில் இளமுருகு RE பைக்கில்  தாம்பரம் ரயில் நிலையம் (பயணம் தொடங்கும் இடம்) அடைந்தேன். அங்கு நான் தாமு, பிரபாகர்  மற்றும் பரணி சார் அவர்களை சந்தித்தேன். பின்னர் மற்றவர்களுக்காக காத்திருந்தோம்…….

அனைவரும் ஒருவழியாக மாலை 7.30 மணியளவில் வந்து சேர்ந்தனர். பல முகங்களை எனக்கு தெரியாத போதிலும், நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். தினேஷ் மற்றும் கதிர் அனைவருக்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தெளிவாக விளக்கினார்கள். தினேஷ் மற்றும் பரணி சார் அவர்களால் எங்கள் பைகள், தார்பாய்கள் மற்றும் டென்ட்கள் அவரவர்கள் பைக்கில் நன்கு கட்டப்பட்டிருந்தது. என்னை பிரபாகர் பைக்கின் பின்னால் உட்காரச்சொன்னார்கள்.

மாலை 7.50 மணியளவில் நாங்கள் 19 அந்நியர்கள் 11 பைக்கில் பயணத்தைத் தொடங்கினோம். ஒரு நீண்ட விடுமுறை வார இறுதியாக இருந்ததால் செங்கல்பட்டு வரை பெரிய போக்குவரத்து நெரிசல்   இருந்தது. தினேஷ் எங்களுக்கு முன்னால் இருந்து வழிநடத்தினார் எங்கள் முதல் ஆணை அடுத்த செங்கல்பட்டு டோல் அருகே நிறுத்துவதாக  இருந்தது. மிகவும் உற்சாகத்துடன் நான் பிரபாகர் பைக்கின் பின்னால் சவாரி செய்ய ஆரம்பித்தேன். பின்னர் ஒவ்வொரு டோல் அருகே நிறுத்த எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இரவு 12:00 மணியளவில் திருச்சிக்கு சென்று ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எங்கள் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இருட்டை கிழித்துக்கொண்டு வேகமாக சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் இரவு உணவுக்காக நாங்கள் நிறுத்திவிட்டோம். பரணி சார் மற்றும் சிலர் எங்களை தாண்டி முன்னே சென்று விட்டனர். இரவு உணவுக்கு பின் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். திருச்சிக்கு முன்பு உளுந்தூர்பேட்டை (170KM)  வரை செல்ல இரவு 12:00 மணி ஆனது. CTC -ல் 12 மணிக்கு மேல் வாகனம் ஓட்ட தடை உள்ளதால் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தோம். பின்னர் தினேஷ், நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பின்னால் ஒரு லாரி ஓட்டுனர்கள் உணவருந்தும் சிறிய இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். . தினேஷ் மற்றும் கதீர் இங்கே வழக்கமான வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அங்கேயே ஓய்வெடுத்து அடுத்த நாள் காலை பயணத்தைத் தொடர முடிவு செய்தோம் இளமுருகு வின் குறட்டை ஒலி இருந்தபோதிலும், நாங்கள் எல்லோரும் சிறிது அரட்டை மற்றும் சிரிப்பொலிகளுக்குப் பின் சிறிது நேரம் தூங்கினோம்.

26.01.18 வெள்ளிக்கிழமை (350 KM)




காலை புதுப்பித்தல்களுக்குப் பிறகு, 6 மணியளவில் சூடான தேநீர் அருந்தி விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சில்லென்று காலை பனிக்காற்று மேனியை வருட மேகமலையை நோக்கி எங்கள் பைக்குகள் வேகமெடுத்தன. திருச்சிக்கு அடுத்து மணப்பாறை அருகே நாங்கள் சிற்றுண்டிக்காக நிறுத்தினோம். உணவுக்கு பின் தினேஷ் மற்றும் கதிர் மீண்டும் அனைவருக்கும் வரிசையாக செல்லவும் மற்றும் பாதுகாப்பாக செல்லவும் அறிவுறுத்தினார்கள். ஏனென்றால் திண்டுக்கல் முதல் தேனீ வரை ஒரு வழிப்பாதை மற்றும் வளைவுகள் அதிகம். நாங்கள் சிறிது நேரத்தில் திண்டுக்கல் அடைந்து, தேனிக்கு வலதுபுறமாக திரும்பினோம். கதிர் மற்றும்  தினேஷ், யாரும் அந்த வழியைத் தவறவிடாமல், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று உறுதிபடுத்தினார்கள். திண்டுக்கல் முதல் தேனி வரை வழியில் மஞ்சள் / பசுமை நிற ஆடைகள் அணிந்து பழனிக்கு பக்தர்கள் நடந்து செல்வதை கண்டோம்.
 உத்தமபாளையத்தில் தேநீர் இடைவேளைக்கு பைக்குகள் நிறுத்தப்பட்டது. நாங்கள் கதைகள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். சிறிது சிறிதாக நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அப்போது எல்லோரும் ஒரு குழு புகைப்படம் எடுத்துகொண்டோம். சின்னமனூர் எங்கள் அடுத்த நிறுத்தமாக இருந்தது. அங்கு ஒரு சிறிய மெஸ்சில் எங்கள் மதிய உணவை முடித்தோம். . தினேஷ் மற்றும் கதிர் 3 மணிக்கு முன்னர் மேகமலை சோதனை சாவடியை அடைய திட்டமிட்டிருந்தனர். ஆனால் சோதனை சாவடியை அடைய மாலை 4 மணி ஆனது. வன காவலர் அனுமதி கடிதம் அல்லது ஹோட்டல்  முன்பதிவு நகல் இல்லாமல் மேலே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு தினேஷ் நேரடியாகச் சென்று அலுவலருடன் பேசினார், நிறைய நேரத்திற்கு பிறகு அவர் எங்களை அனுமதித்தார். பசுமை போர்த்திய மேகமலை மலை சிகரங்கள் தூரத்தில் எங்களை வரவேற்றன. நாங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகான ஏரிகள் தாண்டி 13 கி.மீ. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொண்டை ஊசி வளைவு சாலைகளினூடே பயணித்து மேகமலை பஞ்சாயத்து அலுவலகத்தை (Highvayis office) அடைந்தோம். வழியில் ஆங்காங்கே நிறுத்தி புகைப்படம் எடுத்துகொண்டோம்.

 அனைவரும் சூடான தேநீர் அருந்தி புத்துணர்ச்சிக்கு பிறகு, நாங்கள் மகாராஜா மெட்டு செல்ல எங்கள் பைக்குகளில் பயணத்தைத் தொடங்கினோம். கரடுமுரடான சாலையில் சில கி.மீ தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. பாதி வழியில் நாங்கள் சூரியன் அஸ்தமனமாவதைக் கண்டோம் .. இருட்டுவதற்குள் நாங்கள் மஹாராஜா மெட்டுவை அடைய திட்டமிட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெளிச்சம் குறைய தொடங்கியதால், நாங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கே திரும்பி விட்டோம். அடுத்த நாள் அதிகாலையில் மீண்டும் வர முடிவு செய்தோம்.ஆரம்பத்தில் நாங்கள் கூடாரத்தில் (tent) தங்க திட்டமிட்டோம், இரவு வெளியில் மிகவும் குளிராக இருந்தது. பின்னர் பரணி சார், யாருடனோ பேசி எங்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இது மிகவும் வசதியா இருந்தது.  இதற்கிடையில் முரளியின் பைக் பஞ்சரானதால் அங்குள்ள மெக்கானிக் ஒருவர் சரிசெய்து கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சிறிது நேரம் அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு பிறகு நாங்கள் எல்லோரும் பஞ்சாயத்து அலுவலகம் சென்று எங்கள்  குளிர் போர்வையை (Sleeping bag) விரித்து அதனுள் கதகதப்பாக உறங்கினோம்.
 
27.01.18 சனி க்கிழமை (20 + 115 KM)
 
அதிகாலையில் மெதுவாக நாங்கள் ஒருவரையொருவர் எழுப்ப ஆரம்பித்தோம், காலை புத்துணர்ச்சிக்குப் பிறகு, 6 மணியளவில் சூடான தேநீர் அருந்தி, அனைவரும் சில புகைப்படம் எடுத்துகொண்டோம். தேயிலைத் தோட்டம் மூடுபனி மேகங்களால் மூடப்பட்டிருந்தது. மறுபடியும் நாங்கள் மஹாராஜா மெட்டுக்கு கரடுமுரடான சாலையை கடந்து எங்கள் பைக்குகளில் சென்றோம். அழகான ஏரிகள், அழகிய தேயிலைத் தோட்டம், சில்லென்று மேனியை வருடும் காற்று எல்லாமே அற்புதமான உணர்வு, அதை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. கரடுமுரடான சாலையில் பயணித்த களைப்பு,  மேகமலையின் இயற்கை அழகு காட்சிகளினால் அதை மறக்கச் செய்தது. மஹாராஜா மெட்டு சிகரத்தை அடைய சிறிது மேலே ஏற வேண்டியிருந்தது.  நாங்கள் அனைவரும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து மேகங்கள் தழுவும் மலையின் இயற்கை அழகை ரசித்தோம் மற்றும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு நாங்கள் மஹாராஜா மெட்டுவை விட்டு கீழிறங்கி பஞ்சாயத்து அலுவலகம் அருகே இரவு சாப்பிட்ட அதே கடைக்குச் சென்று சிற்றுண்டி அருந்தினோம்.
 
12 மணியளவில் நாங்கள் பைக்குகளில் வாகமனிற்கு செல்லத் தொடங்கினோம். குமுளி, தேக்கடி வழியாக செல்லும்  மலைச்சாலை நன்றாக இருந்தது, பாம்பை போல் வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கத்துடன் இந்த பாதை பயணிப்பதற்கு மகிழ்ச்சியைத் தந்தது. வழியில் ஒரு தேநீர் கடையில் நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது தான் எங்களில் ஒருவர் இல்லாதது தெரிந்தது. சுரேஷ் தான் காணவில்லை, அனைவரும் அவரை தேட முயற்சித்து அலைபேசி எண்ணை அழைத்தோம். ஆனால் பயனில்லை. பதில் வராததால் கதிர் அவரை பின்னோக்கி தேடிச் சென்றார். நாங்கள் முன்னோக்கி சென்று அவரை தேடினோம். ஒரு மணி நேரம் கழித்து சுரேஷ் ஸ்வாதியின் அழைப்பை எடுத்தபோது, ​​அவர் பாதுகாப்பாக வாகமனை அடைந்துவிட்டார் என்று தெரிந்ததும், நாங்கள் நிம்மதியாக உணர்ந்தோம்.


பின்னர் நாங்கள் மாலை 5.30 மணியளவில் வாகமனை நோக்கிச் சென்றோம். வாகமனில் ஒரு பாராகிளைடிங் விழா நடப்பதை கண்டோம். தாங்கள் பாறை மலையேறி, மலையின் அழகை அனுபவித்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு கடையில் அன்னாசிப்பழம், குலிக்கி ஷர்பத் சாறு மற்றும் உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிட்டோம் நாங்கள் உண்மையில் அந்த கடையை காலி செய்தோம். இன்னும் சிறிது நேரம் கழித்து கீழிறங்கி அவரவர் பயண அனுபவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இதற்கிடையில், தினேஷ், பரணி சார் மற்றும் கதிர் இரவு முகாம் அமைக்கும் இடத்தை தேடிச் சென்றனர்.

நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு கூடாரத்தை தினேஷ் உடன் தயாரிக்க ஆரம்பித்தனர். மற்றொரு குழுவில், நானும் பிரபாகரும் இரவு உணவும், தண்ணீரும் வாங்க கதிருடன் சென்றோம். இரவு உணவிற்கு பிறகு நாங்கள் வட்டமாக உட்கார்ந்தோம், தற்போதைய சவாரி மற்றும் அவர்களின் கடந்த சவாரி பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். தினேஷ்- ன் நேபாள பயணம் மற்றும் கதிரின்  யாம்தங் வேலி பயணம் & பிரபா- ன் எவரெஸ்ட் அடிப்படை முகாம் பயணம்". மற்றும் ஸ்வதி -ன் கதை கதிர் பயணம் பற்றி விவரிக்கும் போது அங்கேயே சென்று வந்த உணர்வை தந்தது. வேடிக்கை, சிரிப்பு மற்றும் அனுபவம் நிறைந்த இரவாக அன்று கழிந்தது.

கருத்துகள் இல்லை: